விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘ப்ரீடம்’. வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தில் சுதேவ் நாயர் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் பேசியதாவது:
விஜய் கணபதி பிக்சர்ஸ் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பிடித்த படத்தைத் தருவோம். நாயகன் சசிகுமார் சார் இப்படத்திற்காகப் பார்த்துப் பார்த்து அத்தனை விஷயங்கள் செய்து தந்தார். இயக்குநர் சத்ய சிவா அருமையாக படத்தை எடுத்துள்ளார். லிஜோ மோல் அற்புதமாக நடித்துள்ளார் எல்லோரும் இந்த பாத்திரத்திற்கு அவரைத்தான் சொன்னார்கள். ஜிப்ரான் சார் தன் இசையால் சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார். எங்களுடன் இணைந்த டிரெண்ட் மியூசிக் நிறுவனத்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. என்றார்.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா பேசியதாவது: சினிமா தயாரிப்பில் என்ன பிரச்சனை என்றால் திறமையானவர் நேர்மையானவராக இருக்க மாட்டார், நேர்மையானவர் திறமையானவராக இருக்க மாட்டார் ஆனால் இரண்டும் சேர்ந்தவர் தான் பாண்டியன்.
மிகச் சிறந்த உழைப்பாளி. மென்மையானவர். 200 சதவிகித நேர்மையாளர். பாண்டியன் இந்தப்படத்தை கஷ்டபட்டு கொண்டு வந்துள்ளார். இந்தப்படம் பாண்டியனுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும். இந்த விழா நாயகன் ஜிப்ரான் மிகச்சிறப்பான இசையைத் தருகிறவர்,
சத்ய சிவா சின்ன இடைவேளைக்குப் பிறகு வந்துள்ளார், வெற்றி பெற வாழ்த்துக்கள். சசிகுமாரின் வெற்றியை என் வெற்றி போலத் தான் பார்ப்பேன், அவரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். மிக நேர்மையானவர். அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கச் சந்தோசமாக உள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி போல இன்னொரு வெற்றியைத் தர வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி. என்றார்.