தொழிலதிபர் கே.பாக்யராஜின் மகள் சாலை விபத்தில் மரணம் அடைகிறார். தனது மகளின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல், அப்படியே கேட்கிறார் பாக்யராஜ். சட்டப்படி அது தவறு என்று சொல்லி மறுக்கும் டாக்டர் தான்யா ரவிச்சந்திரனுக்கும், அவரது டீமிற்கும் அரசியல்வாதிகளும், ரவுடிகளும், காவல்துறையும் கடும் நெருக்கடி கொடுக்கிறது.
தான்யா ரவிச்சந்திரனையும், அவருக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் கமிஷனர் தமிழையும் பழிவாங்க டேனியல் பாலாஜி மிகப்பெரிய சம்பவங்களை அரங்கேற்றுகிறார். இந்த மாதிரியான நெருக்கடி நிலையில் தான்யா ரவிச்சந்திரன் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
‘இப்படியொரு துணிச்சலான டாக்டர் இருக்க மாட்டாரா’ என்று ஏங்க வைக்கிறார், தான்யா ரவிச்சந்திரன். நோயாளிகளிடம் பரிவு, பணியில் நேர்மை என பொறுப்பான அரசு ஆஸ்பத்திரி டாக்டராக மிளிர்கிறார் .
டேனியல் பாலாஜியின் அசுரத்தமான வில்லத்தனம், தரமான சம்பவமாக அமைந்துள்ளது. கே.பாக்யராஜ் தனது பாணியில் இருந்து மாறுபட்டு நடித்திருக்கிறார். மகளின் உடலை பார்த்து அவர் கதறியழும் காட்சி உருக வைக்கிறது. எல்லோரையும் மிரட்டும் முன்னாள் எம்எல்ஏ அருள்தாஸ், கண்டிப்பு மிகுந்த போலீஸ் அதிகாரி தமிழ் உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசையும் கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகின்றன. இயக்குனர் ஜே.பி, மிஷ்கின் உதவியாளர் என்பதாலோ என்னவோ, சில காட்சிகளில் அவரது ஸ்டைலை பார்க்க முடிகிறது.