தமிழ் சினிமாவில் கதை நாயகனாக கால்பதித்துள்ள ‘மதுரை(விளையாட்டு) வீரன்’

தமிழ் சினிமாவை மண் மணக்க பேசியவர்கள் மதுரை கலைஞர்கள், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்கள், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களை தந்த மண் மதுரை மண். அந்த வரிசையில் மதுரை மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து விட்டு சினிமாவிற்கு வந்திரு’கிறார்.

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள “ஹபீபி” திரைப்படம் மூலம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்ட ஈசா, தமிழ்நாடு மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் சென்னை கல்லூரி வாழ்க்கையில் உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் பல இடைக்கல்லூரி தங்கப் பதக்கங்களை கைப்பற்றி, இந்திய அளவிலான பல்கலைக்கழகப் போட்டிகளிலும் தொடர்ந்து இறுதிச்சுற்றை எட்டியுள்ளார்.

விளையாட்டுத் துறையில் பெற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மன உறுதியுடன் சினிமா துறையிலும் தனது பயணத்தைத் தொடங்கிய ஈசா, நடிகர் அமீர் நடித்த இயக்குநர் ஆதம் பாவா இயக்கிய “உயிர் தமிழுக்கு” திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். திரைப்பட உருவாக்கத்தின் பல்வேறு நுணுக்கங்களை நேரடியாகக் கற்றுக்கொண்ட இந்த அனுபவம், அவரது கலைப்பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. இதனுடன், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவராகவும் ஈசா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த முக்கியமான வாய்ப்பாக “ஹபீபி” திரைப்படம் அமைந்தது. இப்படத்தில் மாணவன், இளைஞன், முதிர் இளைஞன் என்ற மூன்று வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஈசா, அதற்காக தனது உடல் எடையை கணிசமாக மாற்றியுள்ளார். கதாபாத்திரத் தேவைக்கேற்ப எடையைக் குறைத்து, பின்னர் சுமார் 20 கிலோ வரை அதிகரித்து, மீண்டும் குறைத்து நடித்துள்ளார்.

“ஹபீபி” படம் பார்த்த இயக்குநர்கள் மாரி செல்வராஜ், சுதா கொங்கரா, பாலாஜி சக்திவேல், அமீர், சேரன், சசிகுமார், வெற்றிமாறன், மிஷ்கின், சீனு ராமசாமி, கே. பாக்யராஜ், மகிழ் திருமேனி,சுசீந்திரன், நாசர், பி.சி.ஶ்ரீ ராம், பாண்டிராஜ், அஸ்லம், பா. ரஞ்சித், ராம், வி.இசட். துரை மற்றும் தங்கர் பச்சான் சுரேஷ் காமாட்சி,உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள், ஈசாவின் இயல்பான நடிப்பு, உணர்ச்சிமிக்க வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்துள்ள அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளனர்.

விளையாட்டு வீரரின் ஒழுக்கம், உதவி இயக்குநரின் அனுபவம், சட்டக் கல்வியின் பார்வை மற்றும் ஒரு கனவுக்காரனின் விடாமுயற்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து தனது புதிய கலைப்பயணத்தைத் தொடங்கியுள்ள ஈசாவிடம், தமிழ் சினிமாவில் நல்லதொரு நாயகனாக வலம் வரும் அனைத்து தகுதிகளும் நிறைந்திருக்கிறது.

Comments (0)
Add Comment