விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் 4 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘கட்டா குஸ்தி’ படம் பெரிய வெற்றி பெற்றது. இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவந்து அதுவும் வெற்றி பெற்றிருப்பதோடு வசூலையும் குவித்து வருகிறது. இதனால் படத்தில் பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் தயாரிப்பாளரும், நாயகனுமான விஷ்ணு விஷால் பேசியதாவது:
படத்தின் தயாரிப்பாளர் என்னை முழுமையாக நம்பி, எந்தக் கேள்வியும் கேட்காமல் ‘ஃப்ரீ ஹேண்ட்’ கொடுத்ததே இந்த வெற்றிக்குக் காரணம். அந்த நம்பிக்கையே அன்பின் ஆகச்சிறந்த வடிவம். இயக்குநர் செல்லாவோடு 11 ஆண்டு காலப் பழக்கம் உள்ளது. அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பிற்காலத்தில் அவர் மிகப்பெரிய கமர்சியல் இயக்குநராக வருவார்.
பாக்ஸ் ஆபீஸில் இப்படம் குறைந்தபட்சம் 50 கோடி வசூல் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் இப்படத்தின் உண்மையான முதுகெலும்பு. ‘பார்ட் 1’ மற்றும் ‘பார்ட் 2’ ஆகிய இரண்டிலும் தூணாக நின்றுள்ளனர். தியேட்டரில் இவர்களின் கேரக்டருக்குக் கிடைத்த விசில் சத்தமும் கைதட்டலும், அவர்களுக்கு நான் கொடுத்த வாக்கை நான் காப்பாற்றியதைக் காட்டுகிறது. மீனு மிஸ் கேரக்டரில் நடித்த நடிகை மோக்ஷாவுக்கு திரையரங்குகளில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தை நட்சத்திரம் சாராதான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. அவருடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம்.
முதல் நாளின் மாலைக் காட்சியிலிருந்தே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கொண்டாடும் ஒரு நல்ல ‘ஃபேமிலி ஃபிலிமாக’ இந்தத் திரைப்படம் உருவெடுத்துள்ளது. சினிமா உலகில் எனது 18 ஆண்டு காலப் பயணத்தில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்தும் நான் ஜெயித்ததற்கு ரசிகர்களே காரணம். கடந்த 2-3 ஆண்டுகளாக ‘கட்டா குஸ்தி’ படத்திற்குப் பிறகு எனக்குச் சரியான படங்கள் அமையாததால், “மக்கள் நம்மை மறந்துவிட்டார்களோ?” என்ற பயம் இருந்தது. ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள மாறாத அன்பை மீண்டும் நிரூபித்துள்ளனர். அந்த அன்புக்கு நன்றி. என்றார்.