சத்தமின்றி வெளியாகும் சில சிறிய படங்கள் ஆச்சர்யங்களை தந்துவிடும். அப்படியான ஒரு படம் இது. பாகிஸ்தான் என்பது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரித்து வைக்கப்பட்ட ஒரு நாடு. அதை பகைநாடாக காட்டிக் கொண்டே இரு நாட்டு அரசியல்வாதியும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மிகப்பெரிய அரசியல் மோசடியை மிக எளிய கதை மூலம் சொல்கிறது படம். எல்லையில் தனித்து விடப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கும், பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவருக்கும் ஏற்படும் நட்பும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும்தான் படம்.
இந்த இருவரின் கேரக்டர்கள் வழியாக சர்வதேச ராணுவ அரசியலை பேசுகிறது படம். மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்க, பிரதீப், அர்ச்சனா சிங், யுவா யுவராஜ், சுபாஷ் சிம்பு, அமரன் எம் ஜி ஆர், இன்பா , ஜனனி நடிப்பில் ஜெய் சிவ சேகர் எழுதி இயக்கி இருக்கிறார்.
பட்ஜெட் காரணமாக ஒரு சினிமாவிற்கான தரத்தை படம் பெறவில்லை என்றாலும் படம் சொல்லும் கருத்துக்கள் ஆழமானவை, அர்த்தம் உள்ளவை. நல்ல விஷயங்கள் கொஞ்சம் அழகானதாக இல்லாவிட்டாலும் அதை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் மனசாட்சியுள்ள ரசிகர்களுக்கு இருக்கிறது.
பலரும் பேசத் தயங்கிய விஷயத்தை துணிச்சலாக பேசியவர்களக்கு அடிக்கலாம் ஒரு ராயல் சல்யூட்.