முதல் படத்தில் ஏற்பட்ட வலி நீங்கிவிட்டது: கவின்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஸ்டார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கி உள்ளார். கவின், அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், லால் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி கவின் கூறியதாவது: ‘டாடா’விற்கு பிறகு இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப்… ஒன்லைன் ஆர்டர்.. ஸ்கிரிப்ட் புக்.. என ஏதாவது ஒன்றை கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக. விரிவாக கதையை சொன்னார். அவர் இதயத்தில் இருந்து கதையை சொல்கிறார் என்று கதையை கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது. அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

நான் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘சத்ரியன்’ என்றொரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் யுவன் இசையில் எனக்கொரு பாடல் காட்சியும் இருந்தது. அது படமாக்கப்பட்டது. பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டது. நான் நடித்த முதல் படம். அதில் பாடல் காட்சி நீக்கப்பட்டதால். மனதில் வலி இருந்தது. யுவனை நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விவரித்தேன்.பொதுவாக ஆறுதலுக்காக சொல்வார்கள் அல்லவா… ‘இன்று நடக்கவில்லை என்றால், நாளை இதைவிட பெரிதாக நடக்கும் என்று’. அதைப் பற்றிய தவறான புரிதல் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பது இப்படத்தில் தெரிந்து கொண்டேன்.

இந்த படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். அதில் இடம்பெறும் சின்ன சின்ன சண்டை காட்சிகளும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் விக்கி மாஸ்டர் கடினமாக உழைத்திருக்கிறார். எனக்கு டான்ஸ் மாஸ்டர் என்றால் பயம் தான். எனக்கு நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை… நடனத்தின் மீது இல்லை. நிறைய ஒத்திகையை பார்ப்பேன். இந்தப் படத்தில் மூன்று டான்ஸ் மாஸ்டர்களும் எனக்காக பொறுமையுடன் சொல்லிக் கொடுத்து நடனமாட வைத்தார்கள்.

நல்ல கன்டென்ட் இருந்தால் அந்தப் படத்திற்கு ரசிகர்கள் அபரிமிதமான ஆதரவை தருவார்கள். இதற்கு ‘டாடா’ உட்பட பல படங்களை உதாரணமாக சொல்லலாம். இவற்றையெல்லாம் கடந்து ஒரே ஒரு சிறிய விசயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது’ என பொதுவாக சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடியிருக்கிறது.

ஆனால் இது போன்ற விசயம் எப்படி உருவாகிறது என தெரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த சதவீதத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன். அந்த விசயங்களை எல்லாம் கடந்து நம்பிக்கைதான் வெற்றியை தரும் என நம்புகிறேன். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி, சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.