மக்கள் திலகம் எம்ஜிஆர் ‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கி தயாரித்தபோது சினிமாவில் மக்கள் தொடர்பாளர்கள் என்ற பிரிவை ஏற்படுத்தி அப்போது பிலிம் நியூஸ் என்ற சினிமா பத்திரிகை நடத்தி வந்த தனது நண்பரான ஆனந்தனை அதன் தலைவராக்கினார். இப்போது மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகனான டைமண்ட் பாபு, தனது வங்கி பணியை உதறிவிட்டு சினிமா மக்கள் தொடர்பாளர் ஆனார். ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றிய அவர் தனது நண்பர்ளான மவுனம் ரவி, சிங்காரவேலன், ரியாஸ் அகமது ஆகியோருடன் இணைந்து ‘வி4’ என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் கடந்து 40 ஆண்டுகளாக சிறந்த திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டின் முதல் வாரத்தில் விருது வழங்கும் விழா நடத்தி வருகிறார்.
இதன் 41வது திரைப்பட விருது வழங்கும் விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது ‘சினிமா பேக்டரி’ ராஜேசுடன் இணைந்து இந்த விழா நடத்தப்பட்டது.
விழாவில் இயக்குனர்-நடிகருமான பாக்யராஜூக்கு, ‘சிறந்த திரைக்கதை மன்னன்’ விருதும், நடிகர்-இயக்குனர் பார்த்திபனுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். விருது கே.எஸ்.ரவிக்குமாருக்கும், ஜெயலலிதா விருது கவுதமிக்கும், சிவாஜி விருது பி.வாசுவுக்கும், ஏ.வி.எம்.சரவணன் சாதனையாளர் விருது இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கும், விஜயகாந்த் விருது நடிகை நளினிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் விருது விக்ரம் பிரபுவுக்கும் (சிறை), சிறந்த நடிகை விருது பிரிகிடாவுக்கும் (மார்கன்), சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது சண்முகபாண்டியனுக்கும் (கொம்பு சீவி), சிறந்த நடிகைக்கான சிறப்பு விருந்து சேஷ்விதாவுக்கும் (மார்கன்) வழங்கப்பட்டது.
விழாவில் பிரபு, சார்லி, கலைப்புலி எஸ்.தாணு, வி.சி.குகநாதன், விக்ரமன், டி.சிவா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், எழில் உள்பட திரையுலகினர் பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.