வங்காள விரிகுடா: தாதாவின் காதல் வாழ்க்கை

ஒரு தாதாவின் வாழ்க்கையில் வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளும்தான் கதை. அதை ரத்தமும், சதையுமாக சொல்லியிருக்கிறார்கள். தூத்துக்குடி தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியார், மனைவியால் மனவேதனை அடைந்து, கடற்கரையில் தனிமையில் கிடக்கிறார். அப்போது தற்கொலைக்கு முயற்சிக்கும் முன்னாள் காதலியை காப்பாற்றி, தனி வீட்டில் குடியமர்த்துகிறார். பிறகு அவருக்காக ஒரு கொலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பிறகு அவருடன் சேர்ந்து வாழ்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை உள்பட 21 துறைகளை தனியாக கையாண்டு ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் குகன் சக்ரவர்த்தியார், கேரக்டருக் கேற்ப நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஆவேசமாக நடித்துள்ளார். ஹீரோவுக்கான முகத் தோற்றமும், உடல் கட்டும் அமைந்திருக்கிறது. காதலியாகவும், மனைவியாகவும் வரும் இரு ஹீரோயின்களும் அவருக்காக உருகுகின்றனர். வாசு விக்ரம், வையாபுரி, பொன்னம்பலம் நன்கு நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. ஆக்ஷன், சஸ்பென்ஸ், அமானுஷ்யம், பேமிலி சென்டிமெண்ட், அரசியல் என்று, பல்வேறு ஜானர்களில் படம் பயணித்திற்கிறது. ஒன்மேன் ஆர்மியாக எல்லா பொறுப்பு களையும் ஏற்று செயல்பட்டிருக்கும் குகன் சக்கரவர்த்தியார் பாராட்டுக்குரியவர், கிளைமாக்சில் மறைந்த அப்துல் கலாமின் கருத்துக்களை பேசி இருப்பது நலம்.

Leave A Reply

Your email address will not be published.