பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் மன்னர்கள் என்றாலோ சேர சோழ பாண்டியர்களோடு முடிந்து விடுகிறது. அதையும் தாண்டி வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மன்னனின் வீரத்தையும், தியாகத்தையும் பேசும் படம்.
14ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை தலைநகராக ஆட்சி செய்த 3ம் வீரவல்லாள மகாராஜாவின் (நட்டி நடராஜ்) மேற்பார்வையில், விழுப்புரம் அருகிலுள்ள சேந்தமங்கலத்தை ஆட்சி செய்யும் குறுநில மன்னரின் வாரிசு வீரசிம்ம காடவராயர் (ரிஷி ரிச்சர்ட்), வீரவல்லாள மகாராஜாவை காப்பாற்றும் மெய்காவல் படையான கருட படையில் இணைகிறார். வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவை கைப்பற்ற துருக்கிய மன்னர்களான அலாவுதீன் கில்ஜியும், முகமது பின் துக்ளக்கும் இந்த மன்னர்களை வீழ்த்தி தங்கள் மதத்தை பரப்பும்போது என்ன நடக்கிறது என்பதை சில புனைவுகளை சேர்த்து சொல்கிறது படம்.
14ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த வீரவல்லாள மகாராஜா, துருக்கியரின் படைகளை எதிர்த்து போரிட்ட காடவராயர்கள் பற்றி சில சம்பவங்களை சினிமா பாணியில் சுவையாக சொல்கிறார் இயக்குனர் மோகன்.ஜி . வீரசிம்ம காடவராயராக ரிச்சர்ட் ரிஷி மன்னர்களுக்கே உரிய தோற்றத்துடனும், வீரத்துடனும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார், திரெளபதி தேவியாக
ரக்ஷணா இந்துசூடன் அழகையும், வீரத்தையும் ஒன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். வீரவல்லாள மகராஜாவாக நட்டி நட்ராஜ் அந்த கேரக்டருக்கு உயிரூட்டியுள்ளனர்.
முகமது பின் துக்ளக்காக சிராக் ஜானி, ஜியாசுதீன் தம்கானியாக தினேஷ் லம்பா மற்றும் தேவியானி சர்மா, வேல.ராமூர்த்தி, ‘நாடோடிகள்’ பரணி, திவி, அருணோதயம் லட்சுமணன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா ஆகியோர், படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
கதை நடக்கும் காலக்கட்டத்துக்கு ஒளிப்பதிவாளர் பிலிப் ஆர்.சுந்தரும், ஆர்ட் டைரக்டர் எஸ்.கமலநாதனும் அழைத்துச் சென்றுள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு வரலாற்று படத்தை கொடுத்திருக்கிறார் மோகன்ஜி.