சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறார் இயக்னர் விஜய், மென்மையான உணர்வுகளை பேசும் அவர் இந்த படத்தில் மென்மையான காதலை பேசி இருக்கிறார். தொழிலதிபர் ஜெயபிரகாஷின் மகள் அதிதியை (ஜீவா சங்கர்), சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறார் இசை ஆசிரியை மகனனா சித்தார்த்(மதும்கேஷ்). ஆனால் அதிதியோ சக இசை கலைஞனான ஹரியை (அர்ஜுன் அசோகன்) காதலிக்கிறார். அவருடன் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்காட்லாந்து செல்கிறாள். ஹரி ஒரு அயோக்யன் என்பதை அறிந்து கொள்ளும் சித்தார்த் அதிதியை காப்பாற்ற அவரும் ஸ்காட்லாந்து செல்கிறார்.
ஸ்காட்லாந்தில் ஹரியின் உண்மை முகத்தை அறியும் அதிதி தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அதில் இருந்து அவரை காப்பாற்றுகிறார் சித்தார்த். உயிர் பிழைத்தாலும் நினைவுகளை இழக்கிறார் அதிதி. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
காதலிக்காக வாழ்வையே அர்பணித்த காதலன்கள் பற்றிய கதை நிறைய வந்திருந்தாலும், இந்த படம் அதிலிருந்து வேறுபட்டு, இசை, ஸ்காட்லாந்து இவற்றை பின்னணியாக கொண்டு தனித்து நிற்கிறது. அறிமுக நாயகன் மதும்கேஷ் அலட்டிக் கொள்ளாமல் கேரக்டரை உள்வாங்கி இயக்குனர் சொன்னதுபோல் நடித்திருக்கிறார். நாயகி ஜியா சங்கர் அழகான அறிமுகம். தமன்னா போன்ற சாயலிலும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஸ்காட்லாந்தின் அழகையும், காதலின் ஆழத்தையும் பதிவு செய்திருக்கிறது. இசை தொடர்பான படம் என்பதால் ஹாரிஸ் ஜெயராஜ் பொறுப்புணர்ந்து இசை அமைத்திருக்கிறார்.
அழகான காதல் கதையின் மூலம் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார் விஜய்.