கதையின் நாயகன் ராஜு ஜெயமோகனுக்கு அக்கறையான அப்பா சார்லி, அன்பான அம்மா சரண்யா என மகிழ்ச்சியான குடும்பம். பக்கத்து வீடுக்கு புதிதாக வருகிறது ஆதியாவின் குடும்பம், ஆதியாவின் அம்மா தேவதர்ஷினி. இரு குடும்பத்திற்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வந்து விட தேவதர்ஷினியும், சரண்யாவும் வருங்காலத்தில் சம்பந்தியாகி விட வேண்டும் என்று நினைத்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களை அறியாமலே காதல் செய்ய வைத்து ‘அரேஞ்ச்டு லவ் மேரேஜ்’ செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால் ராஜுக்கு கல்லூரியில் உடன் படிக்கும் நாயகி பாய்வா மீது காதல், ஆதியாவுக்கு ஒரு போலீஸ் அதிகாரி மகன் பப்பு மீது காதல், இந்த இடியாப்ப சிக்கல் எப்படி தீர்கிறது. யார், யாரோடு இணைகிறார்கள் என்பதுதான் படம்.
நகைச்சுவைக்கான உடல் மொழி, ஆங்காங்கே போடும் ஒன்லைனர்கள், எமோஷனல் காட்சிகளில் அழுத்தம் என நாயகனாக நல்ல அறிமுகம் தந்திருக்கிறார் ராஜு ஜெயமோகன். இன்ஃப்ளூயன்ஸராக வரும் பாவ்யா அழகாகக இருக்கிறார், காதல் செய்கிறார், கோபம் கொள்கிறார், பக்குவமாகிறார்.
உடன் நடித்திருக்கும், பப்பு, மைக்கேல் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி சார்லி ஆகியோர் தங்கள் பங்கிற்கு ஆர்ப்பாட்டமான நடிப்பை தந்திருக்கிறார்கள். வண்ணமயமான ஒளியமைப்பு, மழைக் காட்சிகள் ஆகியவற்றைப் படம்பிடித்த விதத்தில் ஒளிப்பதிவாளர் பாபுகுமார் படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையில் பாடல்கள் முனுக்க வைக்கிறது.
இந்தக் கால இளைஞர்களின் காதல் குழப்பங்களை சொல்லி அதற்கான தீர்வையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.