கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘அந்த 7 நாட்கள்’. இப்போது அதே தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகி உள்ளது. இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் தனது தலைப்பை கொடுத்த பாக்யராஜ் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:
பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள படம் ‘அந்த 7 நாட்கள்’. புதுமுகங்கள் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாக்யராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், மற்றும் பலர் நடித்துள்ளனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து தயாரிப்பாளர் கபீர்தாஸ் கூறியதாவது: இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தலைப்புதான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். எங்கள் கதைக்கு இந்த தலைப்பு தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநர் பாக்யராஜ் அவர்களுக்கும் நிச்சயம் மரியாதை செய்யும் விதமாக அமையும். இதற்காக அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார். அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க சம்மதித்தார்.சென்னை மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களை சுற்றிலும் 45 நாட்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.